மேலஆழ்வார்தோப்பு ராமசாமி கோவில் ஆவணி கொடை விழா


மேலஆழ்வார்தோப்பு ராமசாமி கோவில் ஆவணி கொடை விழா
x
தினத்தந்தி 16 Sep 2023 6:45 PM GMT (Updated: 16 Sep 2023 6:45 PM GMT)

மேல ஆழ்வார்தோப்பு ராமசாமி கோவில் கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மேல ஆழ்வார்தோப்பு ராமசாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று கொடை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் கொடை விழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் வில்லிசை, நையாண்டி மேளம், கரகாட்டம், பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான கொடை விழா நேற்று முன்தினம் நடந்தது. காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைந்தது. பகல் 1 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரவு 8 மணிக்கு வில்லிசை, செண்டை மேளம் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சப்பரத்தில் ராமர், லட்சுமணர், சீதா பிராட்டியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேல ஆழ்வார்தோப்பில் முக்கிய வீதிகள் வழியாக சப்பரம் வந்தது. பக்தர்கள் தேங்காய், பழத்துடன் வந்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஊர் மக்கள் மற்றும் விழா கமிட்டினர் செய்திருந்தனர்.


Next Story