மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அழைக்காததால் வியாபாரி கத்தியால் குத்திக்கொலை - உறவினர் வெறிச்செயல்


மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அழைக்காததால் வியாபாரி கத்தியால் குத்திக்கொலை - உறவினர் வெறிச்செயல்
x

தர்மபுரியில் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அழைக்காததால் வியாபாரியை உறவினர் கொலை செய்யதுள்ளார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி விடிவெள்ளி நகரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 34). பேன்சி வியாபாரி. இவர். இருசக்கர வாகனத்தில் பேன்சி பொருட்களை ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்து வந்தார். திவ்யதர்ஷினி(13)என்ற மகளும், ஆகாஷ் (11) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 4-ந்தேதி தேதி மகள் திவ்யதர்ஷினிக்கு பொம்மிடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா வைத்திருந்தார். விடிவெள்ளி நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (42). தொழிலாளி. இவர்கள் 2 பேரும் உறவினர்கள். முனியப்பன் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு ஈஸ்வரனை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், முனியப்பனுக்கு, ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

கோவில் திருவிழா

இந்தநிலையில் நேற்று இரவு விடிவெள்ளி நகரில் கங்கை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முனியப்பன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஈஸ்வரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முனியப்பனின் வலது பக்க வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த முனியப்பன் அங்கேயே ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் முனியப்பனை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், உயிரிழந்த முனியப்பன் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story