நெற்பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்


நெற்பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்
x

நெற்பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் விளக்கம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை
நெற்பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரசாயன உரங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெல் பயிரில் அதிக விளைச்சல் பெறுவதற்கு ரசாயன உரங்கள் மட்டுமே பெரும்பாலான விவசாயிகளால் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரசாயன உரங்களில் பேரூட்ட சத்துக்களாக தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.ஆனால் நுண்ணூட்டச் சத்துகளை அதிலும் குறிப்பாக சிங் சல்பேட் எனப்படும் துத்தநாக சத்தினை பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்துவதில்லை.

நெல் விளைச்சலில் துத்தநாக சத்தின் பங்கானது மிகவும் முக்கியமானது ஆகும். சிங்சல்பேட் அளிக்க இயலாத நிலையில் விளைச்சலில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். துத்தநாக சத்தின் குறைபாடு காணப்படுவதற்கான அறிகுறிகள் அதிக காரத்தன்மை கொண்ட மண்ணில் தொடர்ந்து வயலில் நீரை தேக்கி வைப்பது, பாசன நீரில் அதிக அளவு பைகார்பனேட் உப்பு அளவு இருத்தல் காரணம் ஆகும்.

மஞ்சள் நிறத்தில் நெற்பயிர்கள்

மேலும் அதிக அளவு மணிச்சத்து உரங்களை வயலில் இடுதல், தழைச்சத்து உரமாக தொடர்ந்து யூரியா பயன்படுத்தப்படுவது, தொடர்ந்து நெற்பயிரையே சாகுபடி செய்வதால் மண்ணிலுள்ள துத்தநாக சத்தினை பயிர்கள் எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பற்றாக்குறையினால் பயிர்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கின்றன.

மேலும் களர் நிலங்கள், மணிச்சத்து அதிகமாக உள்ள நிலங்கள், சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ள மண் ஆகிய நிலங்களில் துத்தநாக சத்து பயிர்களுக்கு கிடைப்பதில்லை.இந்த பற்றாக்குறையின் அறிகுறிகள் நெல் நடவு செய்த 2 முதல் 4 வாரங்களுக்குள் தெரியவரும்.

நெல் நுண்ணூட்ட உரம்

பாதிக்கப்பட்ட நெற்பயிரின் இளம் இலைகளின் மைய நரம்பில் வெள்ளை நிறக்கோடுகள் தோன்றும். பின்னர் பழுப்பு நிறக்கோடுகளாக மாறிவிடும். இதனால் பயிர்களின் வளர்ச்சி குன்றி காணப்படும். இதுவே மஞ்சள் நோய்போல காட்சியளிக்கும் இதை சரிசெய்ய ஒரு ஏக்கருக்கு 10 கிலோ சிங் சல்பேட் உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவவேண்டும், அல்லது ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்ட உரத்தினை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும்.நெல் நுண்ணூட்ட உரம் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் மயிலாடுதுறை, காளி, வில்லியநல்லூர், மணல்மேடு ஆகிய வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்புவைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இதனை விவசாயிகள் பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story