மிலாது நபி பண்டிகை கொண்டாட்டம்


மிலாது நபி பண்டிகை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 28 Sep 2023 10:00 PM GMT (Updated: 28 Sep 2023 10:00 PM GMT)

கோவையில் மிலாது நபி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவையில் மிலாது நபி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மிலாது நபி

இறைதூதரான முகமது நபிகளின் பிறந்தநாள் மிலாது நபியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று மிலாது நபி பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி முஸ்லிம்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண் டனர். சிறப்பு கூட்டங்களை நடத்தி இறைதூதர் முகமது நபிகளின் சிறப்புகள், அவருடைய போதனைகள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

கோவை கோட்டை மேடு பகுதியில் சிறப்பு ஊர்வலம் நடந்தது. இதில் மதரசாக்களில் படிக்கும் இஸ்லாமிய சிறுவர்கள் தாரை- தப்பட்டை அடித்தபடி சென்றனர். அப்போது முகமது நபியின் பெருமை, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி பாடல்களை பாடிய படி சென்றனர்.

இதில் கலந்து கொண்டவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாவட்ட தலைவர் முஸ்தபா, பொதுச்செயலாளர் அப்துல் காதர் உள்ளிட்டோர் குளிர்பானம் வழங்கினர். இந்த ஊர்வலத்தில் முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

பிரியாணி

மேலும் மிலாது நபியையொட்டி உக்கடம், ஆத்துப்பாலம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. மேலும் மிலாதுநபியை யொட்டி, ஏழை-எளிய மக்களுக்கு ஜமாத் சார்பில் இலவசமாக பிரியாணி கொடுக்கப்பட்டது.

இதற்காக பல பள்ளிவாசல்களில் அதிகாலையிலேயே பிரியாணி தயார் செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையம்

இதுபோல் மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் 56-வது மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள பழைய காவல் நிலையம் அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.

ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.எம்.அயூப் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் என்.ஏ.எஸ். ஷாஜகான் ரிப்பன் வெட்டி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் நகரில் உள்ள 60-க்கும் மேற்பட்ட அரபி ஆரம்ப பாடசாலைகளைச் சேர்ந்த பள்ளி மாணவ -மாணவிகள் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்று பெரிய பள்ளிவாசலில் ஊர்வலம் நிறைவடைந்தது.


Next Story