பூண்டி, புழல் ஏரிகளில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு


பூண்டி, புழல் ஏரிகளில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
x

வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் எதிரொலியாக பூண்டி, புழல் ஏரிகளில் அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு செய்தார்.

சென்னை

அமைச்சர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளுர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கத்துக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதை தொடர்ந்து, அந்த நீர்தேக்கத்தின் இருப்பு நிலை மற்றும் உபரிநீர் வெளியேற்றம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

அதிக மழை

நீர்ப்பிடிப்பு பகுதியான காவேரிபாக்கத்தில் இருந்தும், அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்கள் முழுவதும் பெய்து வரும் மழைநீர் அனைத்தும் இந்த பூண்டி நீர்தேக்கத்துக்குதான் வருகிறது. தற்போது ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகமாக மழை பெய்த காரணத்தினால் அதிகப்படியான தண்ணீர் வர ஆரம்பித்துள்ளது.

பொதுவாக பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 3,230 மில்லியன் கன அடி ஆகும். ஆனால் தற்போது 2,973 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இதனுடைய மொத்த ஆழம் 35 அடி ஆகும். ஆனால் 34.67 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. இந்த நீர் தேக்கம் முழு கொள்ளளவு எட்டுவதற்கு சிறிதளவே மீதம் உள்ளது.

ஆகையால் இந்த தண்ணீர் எதிர்பாராமல் வந்த தண்ணீர். முன்பெல்லாம் மழை பெய்தால் ஆங்காங்கே ஏரிகளில் தங்கிவிடும். ஆனால், இப்போது ஏரிகளும் நிரம்பி உள்ளதால் அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் ஓடுகிறது. எனவே, பெய்து வரும் மழை தண்ணீர் அதனுடைய போக்குக்கு ஏற்றாற்போல் செல்கிறது. அந்த போக்குக்கு ஏற்றாற்போல் தண்ணீரை தடுத்து நிறுத்தி, திறந்து விடப்படுகிறது. தற்போது நிலவரப்படி நீர்த்தேக்கத்துக்கு 10,460 கன அடி அளவில் நீர் வரத்து உள்ளது.

எச்சரிக்கையாக...

இதனை கருத்தில்கொண்டு தற்போது நீர்வளத்துறை நிலவரப்படி 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அவ்வாறு திறந்து விடப்படுகிற தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக செம்பரம்பாக்கம், புழல் மற்றும் சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

ஆதலால், இந்த நீர்தேக்கங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் ஆறுகள், ஏரிகள், கன்மாய்கள் ஆகிய நீர் தேக்கங்களில் தண்ணீர் அதிகமாக செல்வதால், ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புழல் ஏரி

பின்னர் புழல் ஏரியை பார்வையிட்ட அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

புழல் ஏரியை பொறுத்தவரை 21.20 அடி ஆழம். அதில் 17.80 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 623 கன அடி தண்ணீர் வருகிறது. அதில் 100 கன அடி புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும், 2 அடிக்கு 30 சதவீதம் தண்ணீர் நிரப்பப்பட வாய்ப்பு உள்ளது.

பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியே செல்ல நிறைய வழி உள்ளது. ஆனால், புழலுக்கு அத்தகைய அதிக கால்வாய்கள் இல்லை. இவற்றை எல்லாம் பொதுப்பணித்துறை கண்காணித்து சரியான அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆதலால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் இரு கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண், எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், சந்திரன், எஸ்.சுதர்சனம், சார் ஆட்சியர் (திருவள்ளுர்) மகாபாரதி, நீர்வளத்துறை தலைமைப்பொறியாளர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் சத்திய நாராயணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story