தைவான் நாட்டு காலணி தொழிற்சாலை நிறுவனத்திற்கு நில ஒதுக்கீடு ஆணை -அமைச்சர் வழங்கினார்


தைவான் நாட்டு காலணி தொழிற்சாலை நிறுவனத்திற்கு நில ஒதுக்கீடு ஆணை -அமைச்சர் வழங்கினார்
x

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ள தைவான் நாட்டு காலணி தொழிற்சாலை நிறுவனத்திற்கு நில ஒதுக்கீடு ஆணையை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

சென்னை,

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்கி வருவதுடன் முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி வருகிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியினை முன்னெடுத்துச் செல்லும் முதல்-அமைச்சரின் அயராத முயற்சியின் காரணமாக தமிழ்நாடு மேலும் மேன்மை பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த 2022 ஏப்ரல் 7-ந்தேதி தைவான் நாட்டைச் சார்ந்த ஹோங் பூ தொழில் குழுமம் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையொப்பமிட்டது. இதைத்தொடர்ந்து சென்னை தலைமைச்செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தைவான் நாட்டைச் சார்ந்த ஹோங் பூ தொழில் குழுமத்தின் நிறுவனத் தலைவர் டி.ஒய்.சங்க்கிடம் நில ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.

ரூ.1,000 கோடி முதலீடு

இதற்காக 125 ஏக்கர் நிலம் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், 5 ஏக்கர் நிலம் உள்நாட்டு பயன்பாட்டிற்காகவும் ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் நிலை 1-ல் கொள்கை அளவில் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இத்தொழிற்சாலை அமைவதன் மூலம் சுமார் 20 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு (17,350 பேருக்கு நேரடியாகவும் மற்றும் 2,650 பேருக்கு மறைமுகமாகவும்) கிடைக்கும். இந்நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் கிருஷ்ணன், சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எ.சுந்தரவல்லி, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஆஷா அஜித், சிப்காட் நிறுவனத்தின் செயல் இயக்குனர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story