யோகா தினவிழா: உடல் ஆரோக்கியமாக இருந்தால் வைரஸ் பாதிப்பு ஏற்படாது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு


யோகா தினவிழா:  உடல் ஆரோக்கியமாக இருந்தால் வைரஸ் பாதிப்பு ஏற்படாது  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
x

உடல் ஆரோக்கியமாக இருந்தால் வைரஸ் பாதிப்பு ஏற்படாது என சர்வதேச யோகா தின விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

சேலம்

சேலம்:

யோகா தினம்

சேலம் சோனா கல்வி குழுமம் சார்பில் சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கல்வி குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா தலைமை தாங்கினார். கலெக்டர் கார்மேகம், கல்விக்குழும துணைத்தலைவர்கள் தியாகு வள்ளியப்பா, சொக்கு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு யோகா தினவிழாவை தொடங்கி வைத்து அவரும் கலந்து கொண்டார். பின்னர் கல்லூரி வளாகத்தில் சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

வைரஸ் பாதிப்பு ஏற்படாது

விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும் போது,'22 மாநிலங்களில் நடந்த பல்வேறு மாரத்தான் போட்டிகளில் நான் கலந்து கொண்டுள்ளேன். அனைவரும் யோகா பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது. உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வது நல்லது. அவ்வாறு ஆரோக்கியமாக இருந்தால் வைரஸ் பாதிப்பு ஏற்படாது' என்றார்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் யோகா அவசியம் என்று சோனா கல்வி குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா பேசினார். தொடர்ந்து சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரிக்கான சர்வதேச விடுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும், சோனா ஆயுஷ் ஐ.டி. துறைக்கான கார்ப்பரேட் யோகா முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயுஷ் மாணவர்களின் கல்வி, கலாசாரம் மற்றும் விளையாட்டு திறனுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், சதாசிவம், உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, மண்டலக்குழு தலைவர் உமாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story