முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க அமைச்சர் பொன்முடி தரப்புகாலஅவகாசம் கோரிக்கை


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க அமைச்சர் பொன்முடி தரப்புகாலஅவகாசம் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:45 PM GMT)

செம்மண் குவாரி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க அமைச்சர் பொன்முடி தரப்பு வக்கீல்கள் காலஅவகாசம் கேட்டனர். இதையடுத்து இவ்வழக்கு விசாரணை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாக புகார் எழுந்தது. அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

5 பேர் ஆஜர்

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 5 பேர் மட்டும் ஆஜராகினர். மேலும் அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை.

இதனிடையே இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள், அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்து வருவதால் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி, மனுதாக்கல் செய்தார். அம்மனு ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அம்மனு மீதான விசாரணையும் நடைபெற்றது.

விசாரணை 17-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

அப்போது அமைச்சர் பொன்முடி தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க ஏதுவாக மனுதாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கும்படி கேட்டனர். இதை ஏற்ற மாவட்ட நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story