இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழா - அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்..!


இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழா - அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்..!
x
தினத்தந்தி 17 Nov 2023 5:15 PM GMT (Updated: 17 Nov 2023 5:19 PM GMT)

இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியானது நவம்பர் 14 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 14 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

புதுடெல்லியில் நடைபெறும் 42-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி-2023-ஐ முன்னிட்டு பிரகதி மைதானத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கில் இன்று (17.11.2023) தமிழ்நாடு நாள் விழாவை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஆசிஷ் சாட்டர்ஜி, மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர்/இணைச் செயலாளர் த.மோகன், ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.

புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், ஆண்டுதோறும் இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தால் இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியானது நவம்பர் 14 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 14 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பொருட்காட்சியில் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள், இந்திய யூனியன் பிரதேசங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்று தங்களது அரசின் வளர்ச்சித் திட்டங்கள், சாதனைகள், கொள்கைகள் போன்றவற்றை காட்சிப்படுத்தியும், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது நாட்டில் தயாரிக்கப்படும் முக்கியப் பொருட்களைச் சந்தைப்படுத்தியும் வருகின்றன.

நடப்பாண்டில், இப்பொருட்காட்சிக்கான கருப்பொருள் -"உலகம் ஒரே குடும்பம் - வர்த்தகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது" (Vasudhaiva Kudumpakam-United by Trade) ஆகும். அதாவது உலகமே ஒரு குடும்பம் அது வர்த்தகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகும். இக்கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT), தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தமிழ்நாடு சிறு தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (SIDCO), வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறை, சுற்றுலாத்துறை, தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் கழகம் (POOMPUHAR),தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (Co-optex) ஆகிய 12 துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.


Next Story