செரப்பணஞ்சேரி வீமீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு


செரப்பணஞ்சேரி வீமீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
x

செரப்பணஞ்சேரி வீமீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் போதிய பராமரிப்பு இல்லாததால் பல்வேறு கோவில்கள் சீரழிந்து வரும் நிலையில் உள்ளது. இதில் குன்றத்தூர் ஒன்றியம் அமரம்பேடு கரியமாணிக்க பெருமாள் கோவில், ஒரத்தூர் அகத்தீஸ்வரர் கோவில் மற்றும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், செரப்பணஞ்சேரி வீமீஸ்வரர் கோவில் போன்றவற்றில் புனரமைத்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்யும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை, இணை ஆணையர் வான்மதி, அமரம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் பொன் ரமேஷ், ஒரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி சுந்தர், செரப்பணஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல் சிறுவஞ்சூர் திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை திருவாலீசுவரர் கோவில், நாவலூர் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பர நாதேஸ்வரர் கோவில் போன்றவற்றில் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யும் பணியில் அமைச்சர்கள் ஈடுபட்டனர்.

பின்னர் நிருபர்களிடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் உத்தரவின்படி பழமை வாய்ந்த கோவில்களை ஆய்வு செய்துள்ளோம். இந்த கோவில்களில் இருக்கின்ற குளங்களை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளும், எந்த ஆண்டு திருப்பணிகள் நடந்ததோ என்று தெரியாமல் இருந்த கோவில்களுக்கு முழுமையாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும் கோவில்களுக்கு சுற்றுச்சுவர் அமைப்பதும், கோவில் சொத்துக்களை பாதுகாப்பது போன்ற முயற்சிகள் குறித்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

இன்று களஆய்வு மேற்கொள்ளப்பட்ட கோவில்களில் 4 கோவில்கள் குடமுழுக்கு பணிகளுக்காக கடந்த ஆண்டே மண்டலக்குழு, மாநில குழு ஒப்புதல் பெறப்பட்டு தற்போது கட்டமைப்பிற்கு உண்டான எஸ்டிமேட் தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. வெகு விரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகளை 3 மாத காலத்திற்குள்ளாக தொடங்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story