ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம்!


ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம்!
x

தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களை கட்டி உள்ளது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

இன்று மாலை 4 மணிக்கு ஈரோடு குமலன்குட்டை பகுதியில் பிரசாரத்தை தொடங்கி முருகேசன் நகர் வழியாக கணபதிநகருக்கு செல்கிறார். அங்கு பொதுமக்கள் மத்தியில் பேசும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதன்பிறகு அம்பேத்கர் அடுக்குமாடி குடியிருப்பு, நாராயணவலசு, இடையன்காட்டுவலசு வழியாக முனிசிபல்காலனிக்கு வருகிறார். அங்கு கருணாநிதி சிலை பகுதியில் பேசுகிறார். இதையடுத்து பழனிமலை வீதி, கமலாநகர், பம்பிங் ஸ்டேசன் ரோடு, வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம், பி.பி.அக்ரஹாரம் வழியாக சென்று காந்திநகரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2-வது நாள் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன்பிறகு ஈரோடு எஸ்.கே.சி.ரோடு, கிராமடை, மணல்மேடு, ஆலமரத்து தெரு, மரப்பாலம், மண்டபம் வீதி, காமாட்சிகாடு அய்யனார் கோவில் வீதி, இந்திராநகர் வழியாக சென்று கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.


Next Story