கிரிவலப்பாதையை அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆய்வு


கிரிவலப்பாதையை அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆய்வு
x

கார்த்திகை மகா தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை மாத மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று திருவண்ணாமலையில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலைக்கு சென்ற அவர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது பொதுமக்கள் வரிசையாக செல்லும் பாதை வழியாக சென்றார்.

அப்போது இந்த பாதை குறுகிய பாதையாக உள்ளது. தீபத் திருவிழாவின் போது அதிகப்படியான பக்தர்கள் வரும்போது நெரிசல் ஏற்படும். மூச்சு திணறலும் ஏற்படும். எனவே பாதையை அகலப்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அடிக்கல் நாட்டு விழா ரத்து

அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கோசாலையை ஆய்வு செய்தார். அப்போது ரூ.28 லட்சத்தில் ஒருங்கிணைந்த கோசாலை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கோசாலையை ஆய்வு செய்த அமைச்சர் கோசாலை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. எனவே கோவிலுக்கு சொந்தமான வேறு இடத்தில் கோசாலையை மாற்ற வேண்டும். இந்த இடத்தினை பக்தர்களுக்கு பயன்பெறும் வகையில் மாற்ற வேண்டும் என்று அறிவுரை கூறிவிட்டு சென்றார். இதனால் அடிக்கல் நாட்டு விழா ரத்தானது.

கோவில் அருகே கட்டப்பட்டுள்ள நூலக திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்க அமைச்சர் சேகர்பாபு சென்றார். நூலகத்தினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்.

கிரிவலப்பாதை

பின்னர் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் கோவில் ராஜகோபுரம் முன்பு ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் கிரிவலப்பாதையில் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story