ஓடும் பஸ்சில் மனைவியிடம் சில்மிஷம்; தட்டிக்கேட்ட கணவரை அடிக்க பாய்ந்தவரால் பரபரப்பு


ஓடும் பஸ்சில் மனைவியிடம் சில்மிஷம்; தட்டிக்கேட்ட கணவரை அடிக்க பாய்ந்தவரால் பரபரப்பு
x

ஓடும் பஸ்சில் மனைவியிடம் சில்மிஷம் செய்தவரை தட்டிக்கேட்ட கணவரை அடிக்க பாய்ந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு அரசு பஸ்சில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் பயணம் செய்தார். அவருக்கு பின் இருக்கையில் இருந்த 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தனது கணவரிடம் தெரிவித்தார்.

ஆத்திரம் அடைந்த அவர், தனது மனைவியிடம் சில்மிஷம் செய்தவரை தட்டிக்கேட்டார். ஆனால் அந்த நபர், "நான், ஆவடியில் போலீசாக உள்ளேன். தூக்க கலக்கத்தில் தெரியாமல் கைப்பட்டு விட்டது. பேசாமல் உட்கார்" என அடாவடியாக பேசினார். இதனால் இளம்பெண்ணின் கணவர், அவருடன் கடும் வாக்குவாதம் செய்தார். அதற்கு அந்த நபர், கையை தூக்கி அடிக்க பாய்ந்தார். இதனால் கணவரை பேசாமல் இருக்கும்படி அந்த பெண் கூறினார். கடைசியில் அந்த நபர், "போலீஸ் ஆபீசரான என்னையே கை நீட்டி பேசுறீயா?" என்று மீண்டும் மீண்டும் அடிக்க பாய்ந்தார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் பஸ்சை டிரைவர் சாலையோரமாக நிறுத்தினார். கண்டக்டர் மற்றும் சக பயணிகள் இருவரையும் சமாதானம் செய்தனர். மேலும் அந்த நபரை, "பேசும்போதே அடிக்க பாய்வதா?" என கண்டித்து அமைதியாக வரும்படி எச்சரித்தனர். இந்த காட்சிகளை சக பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் நடந்தது எந்த பகுதி? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் உண்மையிலேயே அந்த நபர் போலீஸ் தானா? அந்த நபர் போதையில் இருந்தாரா? எனவும், வீடியோவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story