தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல்: எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு


தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல்: எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு
x

சட்டமன்ற தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தவறான தகவல் தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால் அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த மிலானி என்பவர் சேலம் மாவட்ட கோர்ட்டில் தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் கோர்ட்டு, இந்த புகார் குறித்து விசாரணை நடத்த முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும், இதுகுறித்து மே 26-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

ரத்து செய்ய வேண்டும்

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 'புகார்தாரர் மிலானி எடப்பாடி தொகுதியைச் சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல. வேட்பு மனுவில் எந்த தவறான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த புகார் விசாரணைக்கு உகந்தது அல்ல. ஓராண்டு காலத்துக்கு பிறகு இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்பதை கருத்தில் கொள்ளாமல் சேலம் கோர்ட்டு விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு' என கூறப்பட்டிருந்தது.

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல், 'மே 26-ந் தேதிக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டுமென மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்' என தெரிவித்தார்.

இந்த வழக்கை தாக்கல் செய்த பிறகு. அவசர கதியில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஜூன்) 6-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


Next Story