மோகனூரில்வெடி விபத்து நடந்த இடத்தை அதிகாரி ஆய்வு


மோகனூரில்வெடி விபத்து நடந்த இடத்தை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 4 Jan 2023 6:45 PM GMT (Updated: 4 Jan 2023 6:46 PM GMT)
நாமக்கல்

மோகனூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டு தெருவில் கடந்த 31-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசு வியாபாரி தில்லை குமார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். அந்த பகுதியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த வெடி விபத்து குறித்து விசாரணை நடத்த மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேசிய பெட்ரோலிய வெடி மருந்து மற்றும் பாதுகாப்பு அலுவலக துணை கட்டுப்பாட்டாளர் ஸ்ரீ அகில் நந்தி வெடி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த சில பொருட்களை சேகரித்து பல்வேறு தடயங்களை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சம்பவம் குறித்து விசாரித்தார். இதையடுத்து அங்குள்ள அதிகாரிகளிடம் வெடி விபத்து சிலிண்டர் வெடித்ததால் மட்டும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றும், வேறு ஏதாவது காரணம் இருக்கும் என்றும், இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மோகனூர் தாசில்தார் ஜானகி, நாமக்கல், தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு துறை நிலைய அலுவலர் சிவகுமார், மோகனூர் வருவாய் ஆய்வாளர் மலர்விழி, கிராம நிர்வாக அலுவலர் சுமதி, மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், தீயணைப்பு அலுவலர்கள், வருவாய் துறையினர், போலீசார் உடன் இருந்தனர்.


Next Story