2 பேரிடம் ரூ.11.80 லட்சம் மோசடி

ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு, கடன் தருவதாக கூறி 2 பேரிடம் ரூ.11.80 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்;
ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு, கடன் தருவதாக கூறி 2 பேரிடம் ரூ.11.80 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேலைவாய்ப்பு
தஞ்சை வெண்ணாற்றங்கரை பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ஆன்லைன் வர்த்தக வேலைவாய்ப்பு தருவதாக கடந்த டிசம்பர் மாதம் குறுஞ்செய்தி வந்தது. இதை உண்மையென நம்பி எதிர் தரப்பினர் குறிப்பிட்டு அனுப்பிய வங்கிக் கணக்குக்கு அந்த பெண் பல்வேறு தவணைகளில் ரூ.8 லட்சத்து 56 ஆயிரத்து146 அனுப்பினார். ஆனால், அதன் பிறகு எந்தவித பரிவர்த்தனையும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் குறிப்பிட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அந்த எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.இதனால் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை தாமதமாக உணர்ந்து கொண்ட அந்த பெண் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன்
இதேபோல் திருவையாறு அருகே கண்டியூரை சேர்ந்த ஒருவருடைய செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் கடன் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய அவர் குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். எதிர் தரப்பில் பேசியவர் அனுப்பிய வங்கிக் கணக்கு எண்ணுக்கு இவர் பல்வேறு காரணங்களுக்காக ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 500 அனுப்பினார். ஆனால், அதன் பிறகு எதிர்முனையில் பேசியவரின் எண் அணைக்கப்பட்டுவிட்டதால், ஏமாற்றமடைந்ததை அறிந்தார். இதுகுறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






