பால் கொள்முதல் செய்ததற்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உற்பத்தியாளர்கள்


பால் கொள்முதல் செய்ததற்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உற்பத்தியாளர்கள்
x

துங்கபுரம் கூட்டுறவு சங்கம் பால் கொள்முதல் செய்ததற்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என உற்பத்தியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, துங்கபுரம் டி.ஆர்.டி.1211 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களில் சிலர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.அதில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த மாதம் 16-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை பால் கொள்முதல் செய்ததற்கான பணத்தை சங்கம் விரைந்து பட்டுவாடா செய்ய வேண்டும்.

மகாசபை கூட்டம்

சங்கத்தின் செயலாளர் கடந்த 31-ந்தேதி ஓய்வு பெற்று விட்டார். ஆனால் அவர் முறையாக சங்கத்தின் வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. எனவே அவரிடம் இருந்து சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் முறையாக தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கத்தின் செயலாளர் பதவிக்கு பணிமூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். மேலும் சங்கத்தின் மகா சபை கூட்டத்தை துணை பதிவாளர் முன்னிலையில் நடத்தி சங்க பிரச்சினைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story