பனமரத்துப்பட்டி ஏரியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு புதுப்பிக்கும் பணியை விரைந்து முடிக்க அறிவுரை


பனமரத்துப்பட்டி ஏரியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். அப்போது அவர் ஏரியை புதுப்பிக்கும் பணியை விரைந்து முடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

சேலம்

சேலம்,

திட்டப்பணிகள்

சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவசண்முகராஜா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்படி சேலம், மணக்காடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் மணக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.1 கோடியில் வகுப்பறைகள் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். பின்னர் ரூ.22 லட்சத்து 65 ஆயிரத்தில் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், நாழிக்கல்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.

பனமரத்துப்பட்டி ஏரி

பின்னர் ரூ.99 கோடியில் நடைபெற்று வரும் பனமரத்துப்பட்டி ஏரி புதுப்பிக்கும் பணியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், நிலவாரப்பட்டியில் நடைபெற்ற காய்ச்சல் சிறப்பு தடுப்பு முகாமை பார்வையிட்டார். முன்னதாக, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை முன்னிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக் கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மகளிர் திட்ட அலுவலர் செல்வம் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story