சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகன் தீக்குளிக்க முயற்சி


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகன் தீக்குளிக்க முயற்சி
x

கந்து வட்டி கேட்டு மிரட்டுவதால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்

சேலம்:-

கந்து வட்டி கேட்டு மிரட்டுவதால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீக்குளிக்க முயற்சி

தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 33). இவர் தாரமங்கலம் பகுதியில் மெடிக்கல் நடத்தி வருகிறார். தனசேகரன் நேற்று தனது தாய் பழனியம்மாள் (52) என்பவருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

பின்னர் அவர்கள் நுழைவு வாயில் முன்பு தாங்கள் மறைத்து வைத்து பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கந்து வட்டி கேட்டு மிரட்டல்

இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் தனசேகரன் கூறும் போது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிலரிடம் மெடிக்கல் வைப்பதற்காகவும், வீடு கட்டுவதற்காகவும் ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கினேன். கடன் வாங்கியவர்களிடம் மாதந்தோறும் பணத்துக்கான வட்டி கொடுத்து வந்தேன். மேலும் அவர்களிடம் கடன் பெற்ற தொகையை வட்டியுடன் சேர்த்து கட்டிவிட்டேன்.

இந்த நிலையில் அவர்கள் மீண்டும் கந்து வட்டி கேட்டு என்னையும், என் தாயையும் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இதனால் மனமுடைந்த நாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததாக கூறினார். இதனிடையே கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தாய், மகன் மீது டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story