குடும்ப தகராறில் 2 மகன்களை கொன்றுவிட்டு தாய் தற்கொலை


குடும்ப தகராறில் 2 மகன்களை கொன்றுவிட்டு தாய் தற்கொலை
x

குடும்ப தகராறில் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டார். மனைவி, மகன்கள் பிணமாக கிடந்ததை பார்த்த அதிர்ச்சியில் தொழிலாளியும் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை,

மதுரை மாவட்டம் அ.கோவில்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 40). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தனலட்சுமி (38). இவர்களுடைய மகன்கள் ஹரிகிருஷ்ணன் (14), குபேந்திரகிருஷ்ணன்(12). இவர்கள் 2 பேரும் அரசு பள்ளியில் படித்து வந்தனர்.

சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அய்யனார் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.

3 பேர் சாவு

கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் மனவருத்தத்தில் இருந்த தனலட்சுமி நேற்று முன்தினம் இரவு திடீரென தனது மகன்களை கொன்றுவிட்டு, தானும் சாக முடிவெடுத்தார்.

இதற்காக தனது 2 மகன்களுக்கும் விஷம் கொடுத்துள்ளார். பின்னர் அவரும் குடித்திருக்கிறார். இதனால் 3 பேரும் அடு்த்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கிடையே வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த அய்யனார், வீட்டுக்கதவை தட்டினார். ஆனால் யாரும் திறக்கவில்லை. இதனால் சந்தேகப்பட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மனைவி, மகன்கள் பிணமாக கிடந்த காட்சியை கண்டு அலறினார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த அவர், மீதம் இருந்த விஷத்தை குடித்துவிட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story