2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை


2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை
x

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், மோகனூர் காக்காதோப்பு பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 70). இவர் மோகனூர் பேரூராட்சி சந்தை அருகில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகள் குணவதி (28). இவரும், அதேபகுதியை சேர்ந்த கோபி என்பவரும் கடந்த 2017-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவா்களுக்கு பிரணவ் பிரியன் (5), சுஜித்பிரியன் (1½) என 2 ஆண் குழந்தைகள் இருந்தன. காதல் தம்பதியினர் கேசவன் குடும்பத்துடன் ஒன்றாக வசித்து கடையை நடத்தி வந்தனர். மகன் பிரணவ் பிரியன் மோகனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.

மாயமான தாய்-2 குழந்தைகள்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குணவதி குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க வேண்டும், கோவிலுக்கு செல்ல வேண்டும் என தந்தை கேசவனிடம் கூறியிருக்கிறார். அப்போது அவர் உனது மாமனார், மாமியாரை அழைத்துச் செல் என கூறியதாக தெரிகிறது.

இதில் மனமுடைந்த குணவதி சிறிது நேரத்தில் தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார். அதன்பிறகு வெகுநேரமாகியும் அவர்கள் திரும்பவில்லை.

இதையடுத்து மாயமான மகளையும், பேரக்குழந்தைகளையும் கேசவன், மருமகன் கோபி மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் அருகில் இருந்த கிணற்றுப்பகுதியில் பார்த்துள்ளனர்.

கொலை- தற்கொலை

அப்போது அங்கிருந்த வேப்ப மரத்தில் குணவதி தூக்கில் தொங்கிய நிலையிலும், 2 குழந்தைகள் கிணற்றுக்குள் பிணமாக கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மோகனூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகள் உள்பட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில், குணவதி 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு அருகில் இருந்த வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தந்தை தற்கொலை முயற்சி

இதனிடையே துக்கம் தாங்காமல் குணவதியின் தந்தை கேசவன் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல்லில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


Next Story