தாய்- மகன் எரித்துக்கொலை


தாய்- மகன் எரித்துக்கொலை
x
தினத்தந்தி 14 July 2022 6:45 PM GMT (Updated: 14 July 2022 6:45 PM GMT)

ஊத்தங்கரை அருகே தாய் -மகன் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். பூட்டிய வீட்டுக்குள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்த கூலிப்படையினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே தாய் -மகன் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். பூட்டிய வீட்டுக்குள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்த கூலிப்படையினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கொடூர கொலை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது;-

தெருக்கூத்து கலைஞர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன் (வயது 55). தெருக்கூத்து கலைஞர். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

2-வது மனைவி கமலா (50). இவருடைய மகன் குரு (17). இவர், நேற்று முன்தினம் ஐ.டி.ஐ.யில் சேர்ந்து இருந்தார். இவர்கள் 2 பேரும் செங்கல்பட்டி கிராமத்தில் ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர். நேற்று காலை அவர்களின் வீட்டில் இருந்து புகை வந்தது. இதை அக்கம்பக்கத்தினர் பார்த்தனர். அப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் தீ பற்றி எரிந்தது.

எரித்துக்கொலை

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கல்லாவி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு, ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர், கல்லாவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அதேபோல தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் தாய் - மகன் 2 பேரும் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்கள் 2 பேரும் எரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண்ணிடம் விசாரணை

செந்தாமரை கண்ணனின் 2-வது மனைவி கமலாவிற்கும், அவரது கணவரின் 3-வது மனைவி சத்யாவுக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் சத்யா, ஆட்களை ஏவி பூட்டிய வீட்டில் வெளிப்புறமாக இருந்து ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தாய்- மகனை கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அதன்பேரில் போலீசார், சத்யாவை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இரட்டை கொலை தொடர்பாக கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சத்யா ஆட்களை ஏவி கொலை செய்து இருந்தால் அது கூலிப்படையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story