வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள்- பஸ் மோதல்; வாலிபர் பலி


வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள்- பஸ் மோதல்; வாலிபர் பலி
x

வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள்- பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

காஞ்சிபுரம்

பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா தென்னேரி கிராமம் பால்வாடி தெருவை சேர்ந்தவர்கள் நாகராஜ்-உஷா தம்பதி. இவர்களது மகன் செல்வகுமார் (வயது 29). இவர் ஒரகடம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

செல்வகுமார் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தென்னேரி கிராமத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரத்திற்கு சென்று விட்டு வாலாஜாபாத் வழியாக தென்னேரி நோக்கி திரும்பி கொண்டிருந்தார். செல்வகுமார் கீழ்ஒட்டிவாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது வாலாஜாபாத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு காஞ்சீபுரம் நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக செல்வகுமார் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சாவு

பஸ் மோதியதில் செல்வகுமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாஜாபாத் போலீசார் செல்வகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த செல்வகுமாரின் உடலை பார்த்து கதறி அழுத்த அவரது பெற்றோர் தனது மகனின் கண்கள் மூலம் வேறு ஒருவராவது பார்வை பெறட்டும் என்ற நல்ல நோக்கத்தில் உடனடியாக முடிவு செய்து செல்வகுமாரின் கண்களை தானமாக கண்வங்கிக்கு வழங்கினார்கள்.


Next Story