மோட்டார் சைக்கிள் சாலையோர கல்லில் மோதி விபத்து - கட்டிட தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் சாலையோர கல்லில் மோதி விபத்து - கட்டிட தொழிலாளி பலி
x

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் கல்லில் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது24). இவரது நண்பர்கள் கார்த்திக் (18), நரேஷ்(20) கட்டிட தொழிலாளி. இவர்கள் மூவரும் நேற்று இரவு மாதர்பாக்கத்தில் இருந்து ஈகுவார்பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

அப்போது ஈகுவார்பாளையம் அரசு பள்ளி அருகே சாலை திருப்பத்தில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கல்லில் மோதி விபத்துகுள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த நரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பாதிரிவேடு போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமத்தித்தனர். பலியான நரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story