டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x

கும்மிடிப்பூண்டி அருகே டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார்

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சூரியா (வயது 23). இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சூர்யா வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ரெட்டம்பேடு சாலையில் ஆத்துப்பாக்கம் அருகே வரும் போது, அதே திசையில் சென்ற டிப்பர் லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த சூரியாவை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை புறநகர் பகுதிகளுக்கு தினந்தோறும் ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை புறநகர் மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பஸ்களும் இங்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் பூந்தமல்லி பஸ் நிலையத்திற்குள் பயணிகளை இறக்கிவிட வேகமாக வந்த அரசு பஸ் ஒன்று அங்கு நடந்து சென்று கொண்டிருந்த வயதான மூதாட்டி மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர், கண்டக்டர் படுகாயம் அடைந்த மூதாட்டியை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story