சிங்கப்பெருமாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிள்-கன்டெய்னர் லாரி மோதல்; 2 பேர் பலி


சிங்கப்பெருமாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிள்-கன்டெய்னர் லாரி மோதல்; 2 பேர் பலி
x

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிள்-கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

செங்கல்பட்டு

மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்

காஞ்சீபுரம் மாவட்டம் சிறுவேடல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 39), இவரது நண்பர் செங்கல்பட்டு அருகே உள்ள திருமலை வையாவூர் கிராமத்தை சேர்ந்த வினோத் (27). கூலித்தொழிலாளிகள். நேற்று காலை ரமேஷ் குமார், வினோத் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த மகேந்திரா சிட்டி பஸ் நிறுத்தம் அருகே செல்லும்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

சாவு

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்காக அமரர் வாகனம் வருவதற்கு தாமதமானதால் அரை மணி நேரத்திற்கு மேலாக லாரி மோதி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் சாலையிலேயே கிடந்தது. இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story