மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; இளம் பெண் பலி


மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; இளம் பெண் பலி
x

ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார்.

திருவள்ளூர்

மோட்டார் சைக்கிளில் சென்றார்

சென்னை கொருக்குப்பேட்டை பவர் ஹவுஸ் அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஜீவா. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த நபிஷா (வயது 29) என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், காதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நபிஷா தனது கணவரை விட்டு பிரிந்து தனது அண்ணன் மொய்தீன் வீட்டில் கடந்த 4 மாதங்களாக தங்கியிருந்தார்.

இதற்கிடையே, நபிஷா தன்னுடன் பணியாற்றும் நண்பர் சதீஷ்(30) என்பவருடன் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, நேற்று மதியம் சென்னை நோக்கி வந்தார்.

இளம்பெண் பலி

அதில், ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் அரியப்பாக்கம் கிராமம் அருகே வந்தபோது, முன்னாள் சென்ற லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, பெரியபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு நபிஷாவை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே அவர் பலியானதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சதீஷ் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரியை பறிமுதல் செய்து, தலைமறைவான டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

திருவள்ளூர் அடுத்த கீழானூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு தேவாலயம் அருகே வந்தபோது, வேகத்தடையில் ஏறி இறங்கிய நிலையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story