மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; கல்லூரி மாணவி பலி


மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 27 Sep 2023 6:45 PM GMT (Updated: 27 Sep 2023 6:47 PM GMT)

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்- லாரி மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவி பலியானார். உடன் சென்ற வாலிபர் படுகாயம் அடைந்தார்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்- லாரி மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவி பலியானார். உடன் சென்ற வாலிபர் படுகாயம் அடைந்தார்.

லாரி மோதியது

கொல்லங்கோடு அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் சகரியா மகள் ஷானிகா (வயது 19). இவர் தூத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவருடைய உறவினர் வள்ளவிளை பகுதியை சேர்ந்த கிறிஸ்பின் (22).

இவர்கள் இருவரும் நேற்று மதியம் ஒரே மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை கிறிஸ்பின் ஓட்டினார். அவருக்கு பின்னால் ஷானிகா அமர்ந்திருந்தார். மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்ற போது கேரள மாநிலம் கொல்லத்திற்கு எம்.சான்ட் மணல் ஏற்றிக் கொண்டு ஒரு டாரஸ் லாரி வந்தது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன.

மாணவி பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவி ஷானிகாவும், வாலிபர் கிறிஸ்பினும் கீழே தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த ஷானிகா அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

2 கால்களும் முறிந்த நிலையில் கிறிஸ்பின் உயிருக்கு போராடினார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு போலீசார் உதவியுடன் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையே உயிரிழந்த ஷானிகா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story