ஆவடி அருகே மோட்டார் சைக்கிள்கள்நேருக்கு நேர் மோதல்; பெயிண்டர் பலி - மற்றொருவர் படுகாயம்


ஆவடி அருகே மோட்டார் சைக்கிள்கள்நேருக்கு நேர் மோதல்; பெயிண்டர் பலி - மற்றொருவர் படுகாயம்
x

ஆவடி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெயிண்டர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

சென்னை

செங்குன்றம் அடுத்த அலமாதி அருகே உள்ள பட்டாபி நகர் ஆயில்சேரி பகுதியை சேர்ந்தவர் லோகு. இவருடைய மகன் விஷ்ணு (வயது 24). பெயிண்டரான இவர், நேற்று காலை வீராபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பூச்சத்திப்பேடு மெயின் ரோட்டில் ஆவடி அடுத்த பங்காருபேட்டை அருகே சென்றபோது, அதே சாலையில் எதிரே வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், இவரது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி விழுந்த விஷ்ணு, சாலையோரம் இருந்த சிமெண்டு மின் கம்பத்தில் தலை மோதியதில் படுகாயம் அடைந்து அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

எதிரே வந்து மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த ஆவடி அடுத்த வீராபுரம் புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான ராமன் (22) கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்தார். அவர், தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 10 தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் பலியான, விஷ்ணு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story