நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீரால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீரால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
x

நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

அரியலூர்

நான்கு வழி சாலை

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் இடையிலான நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரத்தில் இருபுறமும் 100 அடி மற்றும் 75 அடி இடத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதில் 100 அடி இடம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் மீன்சுருட்டி கடைவீதிகளில் சாலையோரத்தின் இருபுறமும் 75 அடி இடம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டது. இதனால் இந்த சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க போதுமான இடம் இல்லாததால் வடிகால் வாய்க்கால் அமைக்காமல், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இந்நிலையில் மீன்சுருட்டி பகுதியில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மழைநீர் ெசல்ல வழியின்றி கடைவீதியில் பஸ் நிறுத்தம் அருகே குளம்போல் தேங்கி காட்சி அளிக்கிறது. ேமலும் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு, படுக்கக்கூட இடம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மழைநீர் தேங்கி நிற்பதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ள பகுதியில் குண்டும், குழியுமாக பள்ளங்கள் உள்ளன. அதில் சுமார் 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நிற்பதால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது.

தண்ணீரில் மிதந்து செல்லும் வாகனங்கள்

இதேபோல் பஸ் நிறுத்தத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வெளியூர் செல்லும் பொதுமக்கள் அங்கு நின்று பஸ் ஏறி செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தரைக்கடைகள் வைக்கப்படும் பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ெசல்லும் வாகனங்கள் தண்ணீரில் மிதந்தபடி செல்கின்றன.

எனவே நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் இந்த சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகாலை உடனடியாக அமைக்க வேண்டும். இதேபோல் நெல்லித்தோப்பு கிராமத்தில் புதிய மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக மோட்டார் மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story