வடபழனியில் ரத்த காயங்களுடன் சினிமா 'லைட் மேன்' உடல் மீட்பு; கொலையா என போலீசார் விசாரணை


வடபழனியில் ரத்த காயங்களுடன் சினிமா லைட் மேன் உடல் மீட்பு; கொலையா என போலீசார் விசாரணை
x

வடபழனியில் சாலையோரம் மர்மமான முறையில் ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்த சினிமா ‘லைட்மேன்’ உடலை மீட்ட போலீசார், கொலையா? என விசாரித்து வருகின்றனர்.

சென்னை

உடல் மீட்பு

சூளைமேடு ஸ்ரீராம்புரம், 1-வது தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 57). சினிமா துறையில் லைட் மேனாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பார்வதி (52). இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற கணேசன் சூளைமேடு பெரியார் பாதையில் சாலையோரம் வாயில் ரத்தம் வடிந்த நிலையில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக வடபழனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மர்மமான முறையில் இறந்து கிடந்த கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்கள் அடித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

மேலும் அதேபோல், சென்னை விருகம்பாக்கம், இளங்கோ நகர் அனெக்ஸ் பகுதியில் சாலையோரத்தில் தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் ரத்தக்காயத்துடன் ஒருவர் இறந்து கிடப்பதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விருகம்பாக்கம் போலீசார், ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பாபு (65) என்பதும், அவரை மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


Next Story