முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் ஆனித் திருவிழா கொடியேற்றம்...!


முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் ஆனித் திருவிழா கொடியேற்றம்...!
x

முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் ஆனி திருவிழா இன்று முதல் 13-ஆம் தேதி வரை 11 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

முக்கூடல்,

நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிரசித்திப் பெற்ற முத்துமாலையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 11 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் தீர்த்தவாரியும் அம்பாள் சப்பர பவனியும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கலை நிகழ்ச்சிகள்

1-ம் திருநாள் ஹரிராம் சேட் நற்பணி மன்றம் மற்றும் நாடார் இளைஞர் அணி சார்பாக விழாவவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விழா நாட்களில் தினமும் காலையில் அம்பாளுக்கு பூஜையும், பகல் 12 மணிக்கு பகல் பூஜையும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும். மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து முக்கூடல் நகரை சுற்றி தீர்த்தவாரியும், இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் ரத பவனியும், இரவில் கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.

பால் குடம்

8-ம் திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து பால்குடம் சுமந்து முக்கூடலில் சுற்றி வருவது மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும். ஒன்பதாம் திருநாள் அன்று இரவு அம்பாள் சப்பர பவனி உடன் ஏராளமான கலை நிகழ்ச்சிகள், பல மேளதாளங்களுடன் வெகுவிமரிசையாக நடைபெறும். 10-ம் திருநாள் அன்று கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

11-ம் திருநாள் அன்று கோவில் வளாகத்தில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இவ்விழாவில் வெளி ஊர்களில் வசிக்கும் முக்கூடலை சேர்ந்த நபர்கள் மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வது இவ்வூரில் தொன்றுதொட்டு வரும் பழக்கமாகும்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் எல்.வேல்சாமி, செயலாளர் எஸ். சந்திரன, துணைத் தலைவர் மாரியப்பன், பொருளாளர் முத்தரசன், மற்றும் முக்கூடல் இந்து நாடார்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.


Next Story