138 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்


138 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
x

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாக குறைந்தது

தேனி

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்ெபரியாறு அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 9-ந்தேதி நீர்மட்டம் 139.55 அடி வரை உயர்ந்தது. இந்நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை.

இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. மேலும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதற்கிடையே அணையின் நீர்மட்டம் நேற்று 138.15 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2,770 கனஅடியாக காணப்பட்டது. இந்நிலையில் இன்று அணையின் நீர்மட்டம் 138 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1,793 கன அடியாகவும் குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,172 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து குறைந்ததால் கேரள மாநிலத்திற்கு உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story