முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியாக உயர்வு


முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 14 Dec 2022 7:00 PM GMT (Updated: 14 Dec 2022 7:00 PM GMT)

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியாக உயர்ந்தது. இதனால் கேரளாவுக்கு 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி

முல்லைப்பெரியாறு அணை

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

141 அடியாக உயர்வு

முல்லைப்பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் காலை 6 மணி நிலவரப்படி 141 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 1,166 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 511 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மத்திய நீர்வள ஆணைய அமலாக்கத்தின் ரூல்கர்வ் முறைப்படி, இந்த மாதம் (டிசம்பர்) முதல் அடுத்த ஆண்டு மே 31-ந்தேதி வரை முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியதால், தமிழக பொதுப்பணித்துறையினர், கேரள மாநிலம் வல்லக்கடவு, சப்பாத்து உள்ளிட்ட பகுதி மக்களுக்கு 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியபோது கேரள பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயரும்போது, இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.


Next Story