குமாரபாளையம் அருகேமனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளிவிஷம் குடித்து தற்கொலை முயற்சி


தினத்தந்தி 21 Aug 2023 7:00 PM GMT (Updated: 21 Aug 2023 7:00 PM GMT)
நாமக்கல்

குமாரபாளையம்:

குமாரபாளையம் அருகே மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளி, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகராறு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சி அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் மாது (வயது 58). இவருக்கு வடிவு என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் சில ஆண்டுகளிலேயே கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் வடிவு கணவரை பிரிந்து சென்றார்.

இதனால் மாது தனது மகன் ஈஸ்வரமூர்த்தியுடன் வசித்து வந்தார். இதையடுத்து அவர் 2-வதாக பொன்னம்மாள் (45) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மாதுவிற்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் அவர் மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்பதற்காக குமாரபாளையத்தில் இருந்து சென்றார். பின்னர் அவர் இரவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தூங்கினார்.

கொலை

இதையடுத்து நேற்று காலை எழுந்த மாது வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கி கொண்டிருந்த பொன்னம்மாளின் தலையில் திடீரென கட்டையால் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த பொன்னம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு சிறிது நேரத்தில் மயங்கினார். பின்னர் வீட்டுக்கு வந்த மகன்கள் தாயார் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், தந்ைத மயக்கம் அடைந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து தந்தையை மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பொன்னம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். எனினும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாது கண்விழித்த பின்னரே கொலைக்கான உண்மை காரணம் தெரியவரும் என போலீசார் கூறினர். மேலும் சிகிச்சை முடிந்ததும் மாதுவை கைது செய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மனைவியை கணவனே அடித்துக்கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அருவங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story