தொழிலாளி வெட்டிக்கொலை


தொழிலாளி வெட்டிக்கொலை
x

சிவபாண்டி 

தினத்தந்தி 8 Dec 2022 7:00 PM GMT (Updated: 8 Dec 2022 7:00 PM GMT)

நாகையில், பட்டப்பகலில் தொழிலாளி ஒருவரை 4 பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டிக்கொன்றனர். தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்

நாகையில், பட்டப்பகலில் தொழிலாளி ஒருவரை 4 பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டிக்கொன்றனர். தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கூலி தொழிலாளி

நாகை தருமகோவில் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருடைய மகன் சிவபாண்டி(வயது 35). கூலித்தொழிலாளியான இவர் நேற்று காலை 11.30 மணி அளவில் தனது நண்பர்கள் வினோத், ரவிக்குமார் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் நாகை அபிராமி அம்மன் சன்னதி பகுதி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை கொண்ட மர்ம கும்பல், சிவபாண்டியை வழிமறித்தனர்.

வெட்டிக்கொலை

பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக சிவபாண்டியின் தலையில் வெட்டினர். இதை சற்றும் எதிர்பாராத அவருடைய நண்பர்கள் ரவிக்குமார், வினோத் ஆகியோர் சத்தம் போட்டனர்.

உடனே அந்த கும்பலை சேர்ந்த 4 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர். மர்ம கும்பல் வெட்டியதில் சிவபாண்டி ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே துடி, துடித்து உயிரிழந்தார்.

போலீஸ் மோப்ப நாய்

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் 'துலீப்' வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து அருகில் உள்ள மலைஈஸ்வரன் கோவில் சன்னதி தெரு வரை குறிப்பிட்ட தூரம் ஓடிச்சென்று விட்டு மீண்டும் கொலை நடத்த இடத்துக்கே வந்தது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இந்த கொலை சம்பவம் பற்றி அறிந்ததும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக சிவபாண்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது இந்த கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகையில், பட்டப்பகலில் தொழிலாளி ஒருவரை 4 பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டிக்கொன்றனர். தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிவபாண்டியின் மனைவி கமல்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிவபாண்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பட்டப்பகலில் தொழிலாளி ஒருவரை 4 பேர் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் விசாரணை

கொலை செய்யப்பட்ட சிவபாண்டி மீது கஞ்சா விற்பனை, சாராய கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து உடனடியாக உத்தரவிட்டார்.இதனையடுத்து தனிப்படை போலீசார் கொலை நடந்த இடத்தின் அருகே உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கொலை நடந்த பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். கொலை நடந்த நேரத்தில் அங்கு உள்ள கடைகளில் ஏராளமானோர் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் கொலையை துணிச்சலாக அரங்கேற்றியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் சிவபாண்டியை வெட்டி சாய்த்துவிட்டு அவர்கள் தப்பி சென்றனர்.கொலைக்குப்பின்னர் அந்த பகுதியில் மயான அமைதி நிலவியது. பாதுகாப்புக்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் இயல்பு நிலை திரும்புவதற்கு வெகுநேரமானது. சிவபாண்டியின் உறவினர்கள் அங்கு வந்து அவருடைய உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.


Next Story