ஊத்தங்கரை அருகே பயங்கரம்காதல் திருமணம் செய்த மகன் ஆணவ கொலைதடுக்க வந்த தாயையும் வெட்டிக்கொன்ற தொழிலாளி


தினத்தந்தி 15 April 2023 7:00 PM GMT (Updated: 15 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் மகனை தொழிலாளி அரிவாளால் வெட்டி ஆணவ கொலை செய்தார். இதை தடுக்க வந்த தாயையும் வெட்டிக்கொன்றார்.

இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தையல் தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கதவணி ஊராட்சி காரப்பட்டு அருகே உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 50). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி சுந்தரி. இவர்களுக்கு பவித்ரா, சுஜி என்ற 2 மகள்களும், சுபாஷ் (25) என்ற மகனும் உள்ளனர்.

இதில் பவித்ராவிற்கு திருமணம் ஆகி விட்டது. சுஜி கல்லூரியில் படித்து வருகிறார். சுபாஷ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தண்டபாணி திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருடன் மனைவி சுந்தரியும், மகள் சுஜியும் உள்ளனர்.

காதல் திருமணம்

இந்த நிலையில் சுபாஷ் ஊத்தங்கரை அருகே அருணபதியில் தனது பாட்டி கண்ணம்மாள் (70) என்பவருடன் தங்கி இருந்தார். இதனால் சுபாஷ் பெற்றோரை பார்ப்பதற்காக அடிக்கடி திருப்பூருக்கு சென்று வந்தார். அப்போது அவருக்கும் அங்கு வேலை செய்து வந்த அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுசுயா (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் சுபாஷ், அனுசுயாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி அவரை கடந்த 27.3.2023 அன்று திருமணம் செய்து கொண்டார். பின்னர் மனைவியை தனியாக தங்க வைத்து விட்டு சுபாஷ் தனது பாட்டி வீட்டுக்கு வந்தார்.

பாட்டி கண்டிப்பு

இதையடுத்து தனது பாட்டியிடம் தான் திருமணம் செய்து கொண்ட விஷயத்தை கூறினார். வேறு சமுதாயத்தில் திருமணம் செய்து கொண்டு விட்டாயே. உனது தந்தைக்கு தெரிந்தால் என்ன செய்வார் என தெரியுமா? என அவரது பாட்டி கண்டித்தார். ஆனாலும் பேரன் என்பதால் இந்த விஷயத்தை தனது மகன் தண்டபாணியிடம் எப்படி சொல்வது? என தெரியாமல் கண்ணம்மாள் தவித்தார்.

இந்த நிலையில் திருப்பூரில் தனக்கு வேலை இல்லாததால் அருணபதிக்கு வந்த தண்டபாணி தனது தாய் வீட்டில் இருந்தார். அப்போது அரசல், புரசலாக தனது மகன் வேறு சமுதாய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து தனது தாய் கண்ணம்மாளிடம் மகன், மருமகளை அழைத்து கொண்டு வருமாறு கூறினார்.

வெட்டிக்கொலை

அதன்படி கண்ணம்மாள் தனது பேரன் சுபாஷிடம் மருமகளை அழைத்து கொண்டு வருமாறு கூறினார். இதையடுத்து சுபாஷ் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி அனுசுயாவுடன் பாட்டி கண்ணம்மாளின் வீட்டுக்கு வந்தார். இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அதிகாலை 4 மணி அளவில் தண்டபாணி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மகன் சுபாசை சரமாரியாக வெட்டினார். சுபாஷின் அலறல் சத்தம் கேட்டு பதறி போய் எழுந்த கண்ணம்மாள் தடுக்க முயன்றார். அதில் அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சுபாஷ், அவருடைய பாட்டி கண்ணம்மாள் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத தண்டபாணி அரிவாளால் மருமகள் அனுசுயாவையும் துரத்தி, துரத்தி சென்று வெட்டினார்.

போலீசார் விசாரணை

இதில் அனுசுயா வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் சாலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். 3 பேரையும் வெட்டிய தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது அனுசுயாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் அனுசுயாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின், ஊத்தங்கரை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த சுபாஷ், கண்ணம்மாள் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டபாணியை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story