கீழடி அருங்காட்சியகத்தை 45 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்


கீழடி அருங்காட்சியகத்தை 45 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்
x
தினத்தந்தி 11 May 2023 6:45 PM GMT (Updated: 11 May 2023 6:46 PM GMT)

கடந்த மாதத்தில் மட்டும் கீழடி அருங்காட்சியகத்தை 45 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

சிவகங்கை

திருப்புவனம்

கடந்த மாதத்தில் மட்டும் கீழடி அருங்காட்சியகத்தை 45 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

அருங்காட்சியகம்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தை கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார். பின்பு அருங்காட்சியகத்தின் உள்ளே சென்று ஒவ்வொரு தளமாக பார்வையிட்டும் விவரங்களை கேட்டு அறிந்தார். அதன் பின்பு அருங்காட்சியகத்தின் முன்பு நின்று செல்பி எடுத்து கொண்டார். மறுநாள் மார்ச் 6-ந் தேதி முதல் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். கீழடி அருங்காட்சியகத்தில் 6 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தளங்களிலும் கீழ் பகுதி, மேல் பகுதி என அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கீழடி தோன்றிய வரலாறு குறித்து சிறிய திரையரங்கம் போல் அமைக்கப்பட்டும் படம் ஒளிபரப்பப்படுகிறது. இதில் சுமார் 50 நபர்கள் வரை அமர்ந்து குளிர்சாதன வசதியுடன் கீழடி வரலாறை பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

45 ஆயிரம் பேர்

இந்த நிகழ்ச்சி சுமார் 15 நிமிடம் திரை மூலம் ஒளிபரப்பப்படுகிறது. தினசரி பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து இலவசமாக பார்வையிட்டு சென்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி தினமும் சுற்றுலா பயணிகள், பார்வையாளர்கள் என சுமார் 1500 பேர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்களை பார்வையிட்டு செல்கின்றனர்.

விடுமுறை காலங்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து தினமும் சுமார் 2000 பேர் வரை பார்வையிட்டு சென்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 14-ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அருங்காட்சியகத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 45,000 பேர் பார்வையிட்டுள்ளனர். மேலும் மே மாதம் 10-ந் தேதி வரை சுமார் 15,000 பேர் பார்வையிட்டு சென்றதாகவும் தெரிய வருகிறது.


Next Story