முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்


முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2023 7:15 PM GMT (Updated: 24 Oct 2023 7:16 PM GMT)

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கோவை உக்கடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோயம்புத்தூர்
உக்கடம்


இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே போர் நடந்து வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவை மாவட்ட அனைத்து ஜமா-அத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் கோவை உக்கடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


இதற்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.சாதிக்அலி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைப்பாளர் இனாயத்துல்லா தொடங்கி வைத்து பேசினார்.

ஜமா-அத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட செயலாளர் சபீர் வரவேற்றார். இதில் எஸ்.டி.பி.ஐ. மாநில செயலாளர் ராஜா உசேன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில பேச்சாளர் ரெக்ஸ் ரபி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, இஸ்ரேல் அரசுக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ள மத்திய அரசை கண்டித்தும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளை உரிய மக்களிடம் வழங்கி அங்கு மக்கள் சுதந்திரத்துடனும், அமைதியாகவும் வாழ தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.


Next Story