முத்தையாபுரத்தில் பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை


முத்தையாபுரத்தில் பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 July 2023 6:45 PM GMT (Updated: 7 July 2023 11:55 AM GMT)

முத்தையாபுரத்தில்பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

ஸ்பிக் நகர்:

பட்டதாரி வாலிபர்

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் திருமாஜி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பால்துரை. இவரது மனைவி ராஜம்மாள் (வயது 51). இவர்களுக்கு 2 மகள்களும், செல்வகுமார்(24) என்ற மகனும் உண்டு. இதில் செல்வக்குமார் பி. காம். பட்டதாரி. செல்வகுமார் கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இதில் செல்வகுமாரின் 2 அக்காள்களும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். அவர்களுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு திருணமும் தள்ளிப்போய் வந்துள்ளது.

திருமண ஏக்கம்

இ்தற்கிடையில் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு செல்வகுமார் அடிக்கடி பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். அக்காள்களுக்கு திருமணம் செய்து விட்டு தான், செல்வகுமாருக்கு பெண் பார்க்க முடியும் என்று பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் திருமண ஏக்கத்தில் அடிக்கடி அவர் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இ்ந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 4 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்பு இரவு 11 மணி அளவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அவரை சாப்பிடுமாறு தாயார் கூறியுள்ளார். அவர் சாப்பிட மறுத்துவிட்டு, திருமணம் குறித்து தாயாரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் கோபமாக வீட்டின் மாடியில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்ட, அறைக்கு தூங்க சென்றுள்ளார். அந்த அறைக்கு கதவுகள் இல்லை. மகன் சாப்பிடாமல் சென்றதால் ராஜம்மாள் கவலையில் இருந்துள்ளார்.

தூக்கில் தொங்கினார்

இதனால் இரவு சுமார் 12.10 மணி அளவில் மகனை சாப்பிட கூப்பிடுவதற்காக ராஜம்மாள் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது மாடி அறையில் நைலான் கயிற்றால் செல்வகுமார் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜம்மாள் அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, கணவர், அவரது மகள்கள் அங்கு ஓடிவந்துள்ளனர். அவர்கள் உடனடியாக நைலான் கயிற்றை அறுத்து தூக்கிலிருந்து செல்வகுமாரை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் விரைந்து வந்து பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதை கேட்ட குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்த தகவலின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிஅரசன் மற்றும் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண ஏக்கத்தில் பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story