"என் மண் என் மக்கள்" 3-ம் கட்ட நடைபயணம்: அவினாசியில் நாளை தொடங்குகிறார் அண்ணாமலை


என் மண் என் மக்கள் 3-ம் கட்ட நடைபயணம்: அவினாசியில் நாளை தொடங்குகிறார் அண்ணாமலை
x
தினத்தந்தி 15 Oct 2023 7:31 AM GMT (Updated: 15 Oct 2023 8:17 AM GMT)

என் மண் என் மக்கள் நடைபயணத்தின் 3-ம் கட்டத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நாளை அண்ணாமலை தொடங்குகிறார்.

திருப்பூர்,

பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச்செல்லும் நோக்கில் 'என் மண் என் மக்கள்' என்ற நடைபயணத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கினார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.

2 கட்ட நடைபயணத்தை முடித்த அவர் 3-ம் கட்ட நடைபயணத்தை கடந்த 6-ந்தேதி தொடங்க இருந்தார். ஆனால் அண்ணாமலையின் டெல்லி பயணம் மற்றும் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட 3-ம் கட்ட நடைபயணத்தை அண்ணாமலை மீண்டும் நாளை (திங்கட்கிழமை) திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தொடங்குகிறார். இந்த நடைபயணத்தின் தொடக்க விழாவில் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் பங்கேற்க உள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் 3 நாள் நடைபயண நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந் தேதி பல்லடம் தொகுதியிலும், 20-ந்தேதி திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். அவினாசியில் நாளை பாஜக தலைவர் அண்ணாமலை 3-ம் கட்ட நடைபயணம் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story