மூதாட்டி மர்ம சாவு கொலையா? போலீஸ் விசாரணை


மூதாட்டி மர்ம சாவு  கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 3 Oct 2023 7:15 PM GMT (Updated: 3 Oct 2023 7:15 PM GMT)

காளையார்கோவில் அருகே மூதாட்டி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை

காளையார்கோவில்,

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மனைவி லட்சுமி(வயது 70). கருப்பையா ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் லட்சுமி தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் அவரது உறவினர் ஒருவர் அவருடைய வீட்டிற்கு லட்சுமியை பார்க்க வந்துள்ளார். அப்போது வீட்டில் மூக்கில் ரத்த காயத்துடன் மூதாட்டி லட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தாராம்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து காளையார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டியின் காதில் அணிந்திருந்த தோடுகளை காணவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி எப்படி இறந்தார்? நகைக்காக யாரேனும் அவரை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Next Story