நாகை- இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்


நாகை- இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்
x

நாகை- இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை தொடங்குகிறது.

நாகை,

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கடந்த 10ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல், நாகை துறைமுகத்திற்கு கடந்த 7ம் தேதி வந்தது.

இந்த கப்பல் சோதனை ஓட்டம் 8ம் தேதி நடந்தது. இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு சென்ற கப்பல், அங்கிருந்து புறப்பட்டு நாகை திரும்பி வந்தது. இந்த கப்பலில் பயணிக்க, பயணிகளுக்கான கட்டணம் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் ரூ.6,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கப்பலில் பயணிகள் 50 கிலோ எடை வரை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடைமைகளைக் கொண்டு செல்லலாம். இந்த பயணத்துக்கு பாஸ்போர்ட், இ விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நிர்வாக காரணங்களினால் கப்பல் போக்குவரத்து தள்ளிவைக்கப்பட்டு இருந்த நிலையில், நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து நாளை துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் முனையத்தில் குடியுரிமை, சுங்கத்துறை ஆகிய பிரிவுகளின் சார்பில் சோதனை செய்யும் கருவி உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. தொடக்க நாளை ஒட்டி நாளை ஒருநாள் மட்டும் கட்டணம் ரூ.3,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 35 பயணிகள் இலங்கை செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.


Next Story