பாலியல் வழக்கில் கைதான நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை...!


பாலியல் வழக்கில் கைதான நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை...!
x
தினத்தந்தி 14 Jun 2023 11:29 AM GMT (Updated: 14 Jun 2023 11:31 AM GMT)

காசியின் லேப்டாப், மொபைலில் 400 ஆபாச வீடியோக்கள் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக சிபிசிஐடி கூறியுள்ளது.

சென்னை

பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து சமூக வலைதலங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் காசிக்கு விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 27). இவர் சமூக வலைதளம் மூலமாக பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையிலும், கந்து வட்டி புகாரின் அடிப்படையிலும் நாகர்கோவில் கோட்டார், வடசேரி, நேசமணிநகர் போலீஸ் நிலையம், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்றும், எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனக்கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதையடுத்து காசி வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இது தொடர்பான புகாரில் கடந்த 2020-ல் கைது செய்யப்பட்ட காசி பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் கைதானார்.

காசியின் லேப்டாப், மொபைலில் 400 ஆபாச வீடியோக்கள் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக சிபிசிஐடி கூறியுள்ளது. 120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன்வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் விரைவு நீதிமன்றம் காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்து உள்ளது.பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story