குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 480 மனுக்கள் குவிந்தன பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 480 மனுக்கள் குவிந்தன  பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 19 Dec 2022 6:45 PM GMT (Updated: 19 Dec 2022 6:45 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு 480 மனுக்களை பொதுமக்கள், கலெக்டரிடம் வழங்கினர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் குமாரபாளையம் தாலுகா அம்மாசிபாளையம் கொக்கராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டதையடுத்து அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியத்திற்கான ஆணையினையும், அவரது மகனுக்கு வரகூர் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதியில் சமையலர் பணியிடத்திற்கான ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, கவுசல்யா, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story