இறைச்சி கழிவுகளைசாலையோரம், சாக்கடைகளில் கொட்டும் கடைக்காரர்களுக்கு அபராதம்நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் கலாநிதி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சென்னு கிருஷ்ணன் முன்னிலை வகித்து பேசியதாவது :-
இறைச்சி கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளில் தினசரி சேகரமாகும் இறைச்சி கழிவுகளை அகற்ற முறையாக ஏற்பாடுகள் செய்து, அந்த விவரத்தினை நகராட்சி ஆணையாளருக்கு எழுத்துப்பூர்வமாக 7 தினங்களுக்குள் வழங்க வேண்டும். பொது இடங்கள், சாலையோரம் மற்றும் சாக்கடைகளில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். மேலும் பொது இடங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்படும்.
குறிப்பாக மீன் கடைகளில் மீன்களை கொண்டு வரும் தெர்மாகோல் பெட்டிகள் பைபாஸ் சாலைகள் மற்றும் சேந்தமங்கலம் ரோடு சாக்கடைகளில் வீசி எறியப்படுகிறது. எனவே மீன் கடை உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் பழனிசாமி, செல்வகுமார், பாஸ்கர் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.






