முதலியார்குப்பம் படகு குழாம் பகுதியில் சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


முதலியார்குப்பம் படகு குழாம் பகுதியில் சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
x

முதலியார்குப்பம் படகு குழாம் பகுதியில் சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தழுதாலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த கண்ணப்பன், பன்னீர் ஆகியோர் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், 'செய்யூர் தாலுகா முதலியார்குப்பம் முகத்துவார பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் படகு குழாம் செயல்பட்டுவருகிறது. முகத்துவார பகுதியில் சுற்றுலா தொடர்பான திட்டங்களை செயல்படுத்த அனுமதியில்லை. முதலியார்குப்பம் முகத்துவாரத்தில் சுற்றுலா தொடர்பான திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் கடலோர ஒழுங்கு மண்டல அமைப்பிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. தற்போது இங்கு கழிப்பிடமும், சுற்றுச்சுவரும் கட்டப்பட்டு வருகிறது. எனவே இந்த கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்தியகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில், இந்த கட்டுமானங்கள் உரிய அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அகற்றிவிடுவதாக தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கழிப்பறை, சுற்றுச்சுவரை அகற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

'தற்போது அங்குள்ள கான்கிரீட் தரைத்தளத்துடன் கூடிய ஓலைக்குடிசை இருக்கலாம். அதேவேளையில் நிரந்தர கட்டுமானங்களை கட்டக்கூடாது. எந்த கட்டுமானம் என்றாலும் கடலோர ஒழுங்கு மண்டல ஆணையத்திடம் அனுமதி பெற்ற பின்பே மேற்கொள்ள வேண்டும்' என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story