தேசிய ஜி.எஸ்.டி. தின விழா: வியாபாரிகள் வரி செலுத்தும் நடைமுறையை ஜி.எஸ்.டி. எளிமையாக்கி உள்ளது


தேசிய ஜி.எஸ்.டி. தின விழா: வியாபாரிகள் வரி செலுத்தும் நடைமுறையை ஜி.எஸ்.டி. எளிமையாக்கி உள்ளது
x

‘வியாபாரிகள் வரி செலுத்தும் நடைமுறையை ஜி.எஸ்.டி. எளிமையாக்கி உள்ளது' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் 5-வது தேசிய ஜி.எஸ்.டி. தின விழா தமிழ்நாடு புதுச்சேரி மண்டல சரக்கு மற்றும் சேவை வரித்துறை சார்பில் நடந்தது.

விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், முறையாக ஜி.எஸ்.டி. வரி செலுத்தியவர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

விழாவில் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

ஜி.எஸ்.டி. மூலம் கிடைக்கும் வருவாய் இந்தியாவுக்கான வளர்ச்சி பாதைக்கு பெரிதும் உதவுகிறது. கொரோனா தொற்றுக்கு பின் தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி. வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது.

பெரும்பாலான மறைமுக வரிகள் ஜி.எஸ்.டி. மூலம் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளன. இதன்மூலம் ஒரே நாடு ஒரே வரி என்ற இலக்கை அடைந்துள்ளோம்.

வியாபாரிகள் வரி செலுத்தும் நடைமுறையை ஜி.எஸ்.டி. எளிமையாக்கி உள்ளது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பெரும்பாலான முடிவுகள் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்படுகிறது.

கூட்டாட்சி செயல்பாட்டின் மிகச்சிறந்த உதாரணம் ஜி.எஸ்.டி. ஆகும். ஜி.எஸ்.டி. கவுன்சில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஒரு கூட்டாட்சி அமைப்பாகும். நாட்டை மேம்படுத்தும் இலக்குடன் இது செயல்பட்டு வருகின்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் அன்பழகன், எம்.வி. எஸ்.சவுத்திரி, ரவி செல்வன், கே.வி.எஸ்.சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story