நவராத்திரி விழா 15-ந் தேதி தொடக்கம்: கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்தன


நவராத்திரி விழா 15-ந் தேதி தொடக்கம்: கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்தன
x

நவராத்திரி விழா வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்தன.

புதுக்கோட்டை

நவராத்திரி விழா

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது நவராத்திரி விழாவாகும். நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிஷாசூரன் என்ற அசுரனுடன், ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு 10-வது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாகும். இதனை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்கள், வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். இந்த கொலுவில் கடவுள் பொம்மைகள், விலங்கின பொம்மைகள், இயற்கை காட்சிகள் அடங்கிய பொம்மைகள், தெய்வீக பொருட்கள் உள்ளிட்ட பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். ஒவ்வொரு நாளும் இந்த விழா நாட்களில் இரவில் பூஜை செய்து வழிபாடு நடத்தப்படும். துர்கா தேவி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளின் வழிபாடாக இருக்கும்.

கொலு பொம்மைகள்

இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. வருகிற 23-ந் தேதி ஆயுத பூஜையாகும். வருகிற 24-ந் தேதி விஜயதசமி பண்டிகையாகும். நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் விற்பனைக்காக கடைகளுக்கு வந்தன. புதுக்கோட்டையில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், கோவில்கள் அருகே உள்ள கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனைக்காக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சிறிய பொம்மைகள் ரூ.50 முதல் விற்பனையாகிறது. குறிப்பிட்ட பொம்மைகள் அடங்கிய சிறிய செட்கள் ரூ.350 முதல் விற்கப்படுகிறது.

கொலு வைத்து வழிபாடு நடத்தக்கூடியவர்கள் தற்போதே பொம்மைகளை வாங்க தொடங்கி விட்டனர். கொலு வைப்பதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றனர். இதேபோல் கோவில்களில் நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.


Next Story