நவராத்திரி விழா தொடங்கியது


நவராத்திரி விழா தொடங்கியது
x

நவராத்திரி விழா தொடங்கியதால் வீடு, கோவில்களில் கொலு வழிபாடு தொடங்கியது.

புதுக்கோட்டை

நவராத்திரி விழா

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றானது நவராத்திரி விழா. நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாள்கள் போரிட்டு 10-வது நாளில் அவனை வதம் செய்து வெற்றி கொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவு கூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நவராத்திரி விழா இன்று தொடங்கியது.

இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பக்தர்கள் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு தொடங்கினர். இதேபோல கோவில்களிலும் கொலு வழிபாடு தொடங்கியது. புதுக்கோட்டை மனோன்மணி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவுக்காக கொலு அமைப்பட்டுள்ளது. இதில் கடவுள் பொம்மைகள், இயற்கை காட்சி, வனவிலங்குகள் உள்ளிட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

விழாவின் முதல் நாளான நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தாா். மேலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் வைக்கப்பட்டிருந்த கொலுவை பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

ஆயுத பூஜை

இதேபோல அரியநாச்சியம்மன் கோவில் உள்பட அம்மன் கோவில்கள், சிவன் கோவில்களில் நவராத்திரி கொலு வைத்து வழிபாடு இன்று முதல் தொடங்கியது. வருகிற 23-ந் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வருகிற 24-ந் தேதி விஜயதசமி பண்டிகையாகும். இதனுடன் விழா நிறைவடைகிறது. விழாவையொட்டி கோவில்களில் தினமும் இரவு ஆன்மிக நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பரதநாட்டியம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.


Next Story